28 செப்டம்பர் 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு

புங்குடுதீவு வித்யா!
இனிய கனவுகளோடு பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து திரிந்த இளம் மாணவியின் சிறகொடித்து உயிர் குடித்தவர்களுக்கான தீர்ப்பு இன்று!
டெல்லி நிர்ப்பயா வழக்கில் கூட பல காரணங்கள் சொல்லி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டும் தாமதம் செய்யப்படும் இந்த சூழலில் இலங்கையில் நடைபெற்ற மிகக்கொடூரமான கற்பழிப்பு வழக்கொன்றிற்கான தீர்ப்பு வரவேற்கப்படத்தக்கது, பாராட்டப்படத்தக்கதுமானது .
காலையில் பள்ளிக்கு சென்ற பெண்ணைக்கடத்தி கதறக்கதற சித்திரவதைப்படுத்தி கூட்டுவன்புணர்வு செய்து கொலையும் செய்தமை நிருபிக்கப்பட்ட பின்னும் நீதியின் தராசு தாழ்ந்தும் உயர்ந்தும் பணங்காசுக்கு விலை போக நிர்ப்பந்திக்கப்ப்ட்டும் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும் இன்றைய தினத்தின் இத்தீர்ப்பு இம்மாதிரி துஷ்டர்களுக்கு கடிவாளம் போடுமா?
நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழு வழங்கிய இத்தீர்ப்புக்கான செயல் திட்டம் எப்படி இருக்கும்?
வித்யா கொலையில் ஒன்பது பேர் மீது வழக்குத்தொடரப்பட்ட நிலையில்ஒன்பது பேரில் ஏழுபேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டும் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டவர் தகுந்த சாட்சியங்கள் இல்லாமையினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்???
ஏழாம் குற்றவாளியும் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்?
காதலுக்கு தூது போனதாகவும், நேரடி சாட்சியங்களால் நிருபிக்கப்படவில்லை என இவ்விருவர் விடுதலைக்குமான காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. மீதி ஏழு பேருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது..
தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு செல்லுமானால் சிங்கள நீதிபதிகளால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. காலத்தின் கோலத்தால் விடுதலையும் செய்யப்படலாம்.
உடனடி தண்டனை என்பதை தவிர இம்மாதிரி சம்பவங்களுக்கான நீதி விசாரனை என்பது காலந்தாழ்த்துதலுக்கும், மறக்கடிக்கப்பட்டு ச்ம்பவங்கள் பத்தோடு பதினொன்றாகி விடுதலுக்கும் தான் இதுவரை பயன் பட்டிருக்கின்றது. வித்யாவுக்கான இத்தீர்ப்பு நடுக்காட்டில் திக்கு திசை தெரியாமல் தடுமாறும் எம்மின மக்களுக்கான ஒளியை நோக்கிய வழிகாட்டும் தீபமாய் உணரப்படலாம். எனினும் தமக்கான நீதி தாமதமானாலும் தரமிழக்காது கிடைக்கும் எனும் நம்பிக்கையை தரும் படி இத்தீர்ப்பு இருக்குமா?
வித்யாவுக்கு பின்னும் இலங்கையில் பல கற்பழிப்புக்கொலைகள் நடந்தப்பட்டிருக்கின்றன. அதற்கான தீர்வுகள் எப்படி நகர்கின்றன?

என் கேள்வி?
இலங்கையில் மரண தண்டனை சட்டம் இன்னும் நிலுவையில் உள்ளதா?
பதிலும் நானே!
தூக்குத்தண்டனை இல்லை. தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றென நினைக்கின்றேன். எங்கோ படித்த நினைவு. மரண தண்டனை வேறு வகையில் இருக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை இன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்த தீர்ப்பு நல்லதொரு விடியல் எனும் நம்பிக்கை தரலாம். ஆனா’லும் நேற்றைய தீலிபனின் நினைவு கூரல் எந்த ஆண்டும் போலல்லாது இவ்வாண்டு சற்று உணர்வு வேகமாய் அனுஷ்டிக்கப்ப்ட்டதன் திசை திருப்பலாகவும் இத்தீர்வு இருக்கலாம். இப்போதெல்லாம் எது நடந்தாலும் அதன் பின் நாம் அறியாத இன்னொன்று உள்ளதே?


தீர்ப்பு குறித்து விபரம் அறிய
http://www.athirady.com/tamil-news/howisthis/1065355.html

24 செப்டம்பர் 2017

பூவோடு சேர்ந்து நாரும்.... இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல!.

17.09.2017 ஞாயிறு நடைபெற்ற பிறந்த நாள் பார்ட்டியில் எங்கள் Hegas Catering Services மூலம் மதிய உணவை ஆர்டர் செய்து எங்கள் உணவின் சுவைக்கும் சேவைக்குமாய் நாங்கள் எதிர்பாராத surprise gift பத்து பிராங்க நோட்டுக்களால் பூத்துக்குலுங்கும் அழகு மரத்தினை தயாரித்து    திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.  நீண்ட கால வாடிக்கையாளர்களான அவர்களின் அன்புப்பரிசு   எனக்குள் மிகப்பெரிய உற்சாகத்தினை தந்திருந்தது.  டிப்ஸ் என்பது எங்களுக்கு புதிதில்லை தான் எனினும்  எங்களுக்காகவே நேரம் எடுத்து பூ மரக்கன்றை வாங்கி  பத்து பிராங்க நோட்டுக்களையும் அழகாக மடித்து அலங்கரித்து அதை மரத்தின் குட்டிக்கிளைகள் உடையாதவாறு கட்டி எங்கள் வீடு தேடி வந்தமை தான் விஷேசமானது அல்லவா? பூத்திருக்கும் காசு மரத்த்ல் 16 நோட்டுக்கள் இருக்கின்றன. 

யாரும் பறித்து விடாதீர்கள். இந்தப்பூக்கள் பறிப்பதற்கல்ல

 

*********** 
தண்ணீருக்குத்தனி இயல்பு உண்டு என்றாலும் கூட அது சார்ந்து நிற்கும் தன்மைக்கு ஏற்ப தனை மாற்றிக்கொள்ளும் இயல்பும் கொண்டது. அது போலவே தான் மனிதர்களும் தனக்கென தனி இயல்பு இருந்தாலும் சேர்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்களோ அப்படிப்பட்டவர்களாகவே ஆகுவதும் உண்டு.
சீர் அழிவதும், சீர் பெறுவதும் நம் சேர்க்கையை வைத்து என்பதைத்தான் நீ உன் நண்பனைச்சொல், நான் உன்னைப்பற்றி சொல்கின்றேன் என சொல்வார்கள். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் சேரும் நட்புக்களை கொண்டு அவரின் குணாதிசயங்களை புரிந்திட முடியும் என்பார்கள்.
புலம் பெயர்ந்து தாய் நாட்டை விட்டு அன்னிய நாட்டுக்குள் புகுந்து புகுந்த நாட்டின் மொழியும் சூழலும் புரியாமல் தடுமாறும் எங்கள் இளையோருக்கும் இது நன்கு பொருந்தும். அவர்கள் சேரும் இடம் சரியாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை வளமானதாயும் தீயர்களோடு சேரும் போது தீய வழியிலும் சென்று தங்கள் வாழ்க்கையை கெடுத்தும் குட்டிச்சுவரும் ஆக்கிக்கொள்வர்.
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள். நல்லவர்களுடன் பழகினால் பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல நாமும் நன்மை அடையலாம். நல்லதை தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல நல்லவர்களை கண்டடைவதும் முக்கியம்.
சுய நலத்துக்காகவேனும் தீமை என்றறிந்தபின் தீயவைகளை விட்டு விலகி வாழ்வது உங்களுக்கும் உங்களை சார்த்தோருக்கும் என்றும் நன்மை தருவதே!
கடந்த பத்தாண்டு வியாபார அனுபவத்தில் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான இளையோருக்கு ஆரம்ப நிலை வேலை கற்பித்து.. இங்கே இருக்கும் சூழலுக்கு ஏற்ப ஏதேனும் உணவு விடுதியில், ஹோட்டலில், என வேலைகளை எடுத்தும் கொடுத்திருக்கின்றோம். அவர்கள் உயர்வில் மகிழ்ந்திருக்கின்றோம். உயர வேண்டும் என ஆலோசனை நல்கி இருக்கின்றோம்.
எங்கேனும் எங்களை சந்திக்கும் போதும் அக்கா நல்லா இருக்கின்றேன் என சொல்லும் போது ஈன்றபொழுதிற்பெரிதுவர்க்கும் அன்னையாய் மனம் நிறைவு கொள்ளத்தான் செய்கின்றது. அப்படியும் எவரேனும் பாதை மாறி கஷ்டப்படுகின்றார்கள் என அறியும் போது மனம் வருந்துகின்றது.
சில பல நேரங்களில் வேலைச்சூழலுக்கு ஏற்ப மிகவும் கடினமாக கோப முகம் காட்டினாலும் அந்த க்கோபத்தின் பின்னிருக்கும் அன்பையும் அக்கறையையும் என் தம்பிகள் ஒவ்வொருவரும் புரிந்தே இருப்பர். முன் விட்டு பின் பேசும் இயல்பு என்னிடம் இல்லாததனால் பலரிடமிருந்தும் தூரமாய் இருந்தாலும் எமை நாடி வரும் இளையோர் நல்வழி காட்டப்பட வேண்டும் எனபது மட்டுமே இன்று வரை எமது குறிக்கோளாய் இருந்திருக்கின்றது. இனியும் இருக்கும்.

நிலையானதென
நினைப்பவைகள் 
தொலைவாகும் 
தொடுவானம் விலை போக
நினைவுகள் வலியாகும்
முகநூல் நட்பே முதலானதாய்
விஷவார்த்தைகள் வசமாகிடும் 
அகமனதோ தரிசாகிட

நுகம் பூட்டி நாம் தொலைந்தே போவோம். 
*****************

18 செப்டம்பர் 2017

குறிஞ்சா இலைச்சுண்டலை அறிஞ்சோமா!?



கொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள்

சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செடி வகைத்தாவரம். Gymnema sylvestre என்றழைக்கப்படும் .சிறுகுறிஞ்சா இலைகள் குடலை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்ததாகவும் நீரழிவு நோயாளர்களை இன்சுலின் எடுப்பதை தவிர்க்க செய்வது என்பதும் அறிவியல் ரிதியில் இன்னும் நிருபிக்கப்படா விட்டாலும் அனுபவத்தில் நீரழிவு நோயாளர்களுக்கு அரு மருந்து என்பதில் ஐயமே இல்லை என்பேன்.

Dregea volubilis எனும் பெயரில் இருக்கும் பெருங்குறிஞ்சா இலை கசப்பாக இருக்கும் இந்த இலை மூலிகைத்தன்மை வாய்ந்தது. இதன் கசப்பும் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லதென்பர்.


செடிவகை சிறு குறிஞ்சா இலைகள்

இவ்விலைகள் குறித்து தகவல்களை விக்கிமீடியாவிலும் இன்னும் தொகுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம், திருத்தலாம் எனும் விதிமுறை விக்கிமீடியா தளத்தின் மீதான நம்பிக்கையை பொய்த்து போக செய்கின்றது. என்றாலும் இயலும் போது இயலுமானோர் அத்தளத்தின் தகவல்கல் பூர்த்தியாக்கப்படுமானால் எதிர்கால சந்ததிகளுக்கு பயன் தருவதாய் இருக்கும்.

சிறு குறிஞ்சா தென்,மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில்வளரும். இச்செடி தென் இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்பட்டு இன்சுலின் தயாரிப்புக்கும் இன்னபிற மருத்துவத்துக்காகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

சுவிஸுக்கும் ஏற்றுமதியாகும் இலைகளில் இவ்விலைகளும் இருக்கின்றது. இங்கே எம்மவர் வீட்டுச்சமையலில் குறிஞ்சா இலைக்கும் பங்குண்டு.



                                       பெருங்குறிஞ்சா கொடி இலையின் காய்கள்
பெருங்குறிஞ்சா இலைகளின் காய் முற்றி வெடித்து சிதறுவதனால் காற்றின் மூலம் விதைகள் தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும் தாவரமாகும்.. தடித்த வலிமையான இலைகளோடுவேலியிலோ, முருங்கை போன்ற கிளைகள் கொண்ட பெரிய மரங்களிலோ பந்தல் இட்டோ வளரும் கொடி வகை தாவரம். இது.
                                       
படர்ந்திருக்கும் கொடி இலைகள்
கொடியில் படரும் பெருங்குறிஞ்சா இலைகளை ஒவ்வொரு இலையாக பறித்து , அதன் காம்பை கிள்ளி தண்ணீர் விட்டு கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து பத்து பதினைந்து இலைகளை ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அடுக்கி சுருட்டு போல் சுருட்டி நடுவில் பாதியாக்கி இடது கையில் பிடித்து கொண்டு வலது கையில் கூரான் பிளேட்டினால் அல்லது சின்ன கத்தியால் மிக மெல்லியதாக சீவி எடுப்பார் அம்மா. அப்போதெல்லாம் எங்கள் ஊரில் வாரத்துக்கு ஒரு தடவையேனும் குறிஞ்சா இலை சுண்டல் எனும் பொரியல் இருக்கும்,

குறிஞ்சா கீரை சுண்டலின் விஷேசமே அந்த கீரையை நாங்கள் மிக மெல்லியதாக அரிந்து எடுப்பதில் தான் இருக்கின்றது. சிலர் காய்கள் கட் செய்யும் பலகையில் வைத்தும் அரிவார்கள். ஆனால் எங்கம்மா, பக்கத்து வீட்டு அக்காக்கள், ஏன் என் தங்கைகள், தங்கை மாமியார் எல்லாம் இப்படி இடது கட்டைவிரல் சுட்டுவிரல் பிடிக்குள் பிடித்துக் கொண்டு வலது கையால் வெட்டும் வேகம் பார்த்து அதிசயித்திருக்கின்றேன்.

எனக்கு குறிஞ்சா கீரை சாப்பிட நிரம்பவே பிடிக்கும், சுடச்சுட சோறும், இந்த கீரை சுண்டலும் ஏதேனும் மீன் பொரியலும் சின்ன வெங்காயம் பச்சையாக இரண்டும் கிடைத்தால் போதும். வேறு கறியோ கூட்டோ வேண்டாம், எனக்கு இக்கீரையினை அரிந்தெடுக்கும் பொறுமை இல்லாததனால் இங்கே கடைகளில் கிடைத்தாலும் வாங்குவதில்லை. எந்தங்கை அடிக்கடி குறிஞ்சாகீரை சுண்டல் செய்வாள்.

மட்டக்களப்பில் அதுவும் பெரியகல்லாற்றுச்சாப்பாட்டுக்கென தனி கைமணமும் பக்குவமும் உண்டு.. அந்த ஊர் கிணற்று நீரின் சுவையும் அவ்வூர் சமையலை ருசியாக்குகின்றதெனில் மிகையில்லை. அத்தோடு ஜாதி,மதம்,இனம்,அந்தஸ்து,தகுதி, தரம் பார்க்காது அறிந்தவர், அறியாதோர் என்றில்லாமல் வீட்டுவாசலுக்கு வரும் எவரையும் விருந்தோம்பி அனுப்பும் குணமும், உபசரிப்பும் அன்பும் கூட கல்லாற்றுச் சாப்பாடு சுவைக்க அதிக முக்கிய காரணங்களாக இருக்கின்றது..

இலங்கை உணவில் கிழக்கு மாகாணம் அதிலும் மட்டக்களப்பு விருந்தோம்பலுக்கும், உணவின் சுவைக்கும் பெயர் போனது. இதை அக்காலத்தில் வடக்கிலிருந்து கிழக்குக்கு வேலை மாற்றம் பெற்றோ ஏதேனும் தேவைக்காகவோ பயணம் செய்யும் ஆண்களை மாந்தீரிகம் செய்து மயக்குவதாகவோ, பாயோடு ஒட்டும் படி மருந்து வைப்பதாகவோ சொல்வார்களாம். மட்டக்களப்புக்கு செல்லும் ஆண்களும் பெரும்பாலும் அங்கேயே பெண் எடுத்து வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதும் இக்கதைகளை நிஜங்களாக்கினாலும் உண்மைக்காரணமாய் உபசரிப்பும் விருந்தோம்பலும், உணவின் சுவையும் தான் அடிப்படைக்காரணங்களாய் இருந்திருக்கின்றது. இருக்கின்றது.

குறிஞ்சா கீரை சுண்டல் செய்வது எப்படி என பார்க்கலாமா?
குறிஞ்சா இலைகள் பத்து
ஒரு கைப்பிடி தேங்காப்பூ
ஐந்து பச்சை மிளகாய்
20 சின்ன வெங்காயம் தோல் உரித்து மெல்லியதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
மஞ்சள், உப்பு
நான் வெஜ் சாப்பிடுபவர்கள் எனில் மீன் துண்டுகள் சேர்க்கலாம். வெஜ் எனில் சேர்க்காமல் விடலாம்,

எப்படி சமைக்கலாம்?
குறிஞ்சா கீரையை மேலே சொன்னபடி கழுவி துடைத்து அரிந்து எடுத்து கொள்ள வேண்டும்

பச்சைமிளகாயை நடுவில் கட் செய்து இரண்டாக்கி கொஞ்சம் நீர் விட்டு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் துளியும் உப்பும் சேர்த்து அவிய விட வேண்டும். பாத்திரத்தினை மூடி அவித்தால் மஞ்சள் வாசனை கீரையில் சேராது.

மீன் சேர்ப்பது எனில் மீனையும் கழுவி துண்டாக்கி பச்சை மிளகாய் சட்டிக்குள் போட்டு அவித்து கொள்ள வேண்டும். மீன் அவிந்ததும் தனியே பிரித்து அதன் முட்களை நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய் அவிந்ததும் கரண்டி கொண்டு கடைந்து விட்டு வெஜ் கீரை சுண்டல் செய்ய விரும்புவோர்.. சூரிய காந்தி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு அதனுள் கீரையை இட்டு கிளறி விட்டு உடனே தேங்காய்ப்பூவை சேர்த்து இரண்டு மூன்று தடவை கீரையுடன் கலந்து தேங்காய்ப்பூ சுண்டியதும் வெங்காயத்தினை சேர்த்து பாதி வெந்த பருவத்தில் ஒரே நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கி விட வேண்டும்.வெங்காயம் நன்கு அவியக்கூடாது. வெந்தும் வேகாமலும் பல்லில் கடி பட வேண்டும். அப்போது தான் கீரைச்சுண்டலே சுவையாக இருக்கும்,

குறிஞ்சா கீரை அதிகம் வேக விட்டால் கசப்பு அதிகமாகும், கீரை போடும் போது பாத்திரத்தில் தண்ணீரும் இருக்க கூடாது. பச்சை மிளகாய் அவித்து கடைந்ததும் அதன் நீர் வற்றி விட்டதா என கவனித்து கீரையை போட்டு கிளறவும். இவ்வகை கீரை சுண்டலுக்கு நீர் இருந்தால் அதிக கசப்புத்தன்மை இருக்கும், தேவையான அளவு உப்பும் சேர்த்தால் போதும், 

மீன் சேர்ப்பவர்கள் பச்சைமிளகாய் கடைந்தது முள் இல்லாமல் உதிரியாக இருக்கும் மீனை போட்டு கிளறி அதன் பின் மேலே சொன்ன முறையில் கீரை, வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்க வேண்டும்..

சுடச்சுட சோறும் கீரை சுண்டலும் உடலுக்கும் நல்ல ஆரோக்கியமாய் நோய் நொடி அண்ட விடாமல் வாய்க்கும் உருசியாய் கிடைத்த அருமந்த உணவுகளை விட்டு நாங்கள் நெடுந்தொலைவு வந்து விட்டோம்.

கீரைகள் சமைக்கும் போது என் பிள்ளைகளுக்கும் கொடுத்து பழக்கி இருப்பதனால் இன்னும் எங்கள் வீட்டில் கீரைக்கறிகளுக்கு இடம் உண்டு.

குறிஞ்சா இலைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்து பகிர்ந்துள்ளேன்.

இந்தப்பக்கம் வந்து படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை இட்டால் நானும் தொடர்ந்து எழுதும் உயிப்பூவை பெறுவேன் அல்லவா?

17 செப்டம்பர் 2017

வெந்தயக்குழம்பும் அம்மம்மாவும்

செவ்வாயும் வெள்ளியும் விரதம்!
மரக்கறிதான் சாப்பிடணும்,
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி கொஞ்சூண்டு தேங்காய்எண்ணெய் விட்டு வதக்கி வெந்தயம் தூவி புளிக்கரைசலைவும் கொச்சிக்காத்தூளுடன்   உப்பும் போட்டு ஒரு கிண்டு கிண்டி விடுவா.அம்மாடியோவ்.. இன்னும் கொஞ்சம் சோறு தா என நாலு தட்டு சோறு தின்னுவோம் வெந்தயக்குழம்பு அன்னிக்கு முழுக்க கையில் வாசனையோட இருக்கும்.
அப்படியே வேலி ஓரத்தில் நிற்கும் தூதுவளையில் இரண்டு கைப்பிடி பிடுங்கி சோத்துப்பானையில் கஞ்சி வடிச்சி அந்த சூடு சோத்துக்கு மேல் வாழையிலையை போட்டு அதுக்கு மேல் தூதுவளையையும் பச்சைமிளகாய் நாலையும் வைச்சு மூடி வைச்சிருவா. எரியும் விறகை அணைச்சி தணலில் வேக விட்டால் பத்து நிமிடத்தில் தூதுவளையை பச்சைமிளகாயுடன் சின்ன வெங்காயம் ஒரு பிடி தேங்காப்பூ வைச்சி அம்மியில் அரைச்செடுத்தால்....சுடச்சுட சோறும் தூதுவளை பச்சடியுமாய் அமர்க்களம் தான்.
அம்மம்மா கைச்சமையல் ஒருவிதம் என்றால் அம்மா சமையல் இன்னொரு விதம். எதை செய்தாலும் அன்பையும் அக்கறையையும் அள்ளி சமைப்பார்கள் என்பதனால் ருசியும் தனி.
சின்ன வெங்காயம் சின்ன சீரகம் தாளிச்சு தேங்காய்ப்பூ போட்டு அரைச்சி எடுக்கும் சட்னியும் தோசையும் எங்கம்மா சுட்டால் ஊருக்கே வாசனைவரும். அப்படி ஒரு ருசி எங்கேயும் சாப்பிட கிடைக்கவே இல்லை.
அப்பல்லாம் தூதுவளை பச்சடி,, கறிவேப்பிலை துளிரில் பச்சடி, முருங்கைக்கீரை துளிர் பச்சடி குறிஞ்சா கீரை சுண்டல், கானாந்தி முல்லை லெச்சகட்டை கீரைக்குள் புளி மாங்காயும் கீரி மீனும் போட்டு சொதி என எளிய உணவு தான், வீட்டு ஓரத்தில் வேலியில் வளரும் கீரைகளை கொண்டே சமைப்பார்கள்.
கெழுத்தி மீன் புளிமாங்காய் உப்பவியல்
கூனியும் புளிமாங்காயும் கடையல்
சள்ளல் மீன் மிளகு தண்ணீர்
ஆத்தில் பிடிக்கும் செல்வமீன் உப்பவியலோ பொரியலோ பசித்து ரசித்து ருசித்து  வசித்தோம். 

16 வயதில் சுவிஸுக்கு வந்து 13 வருடம் கழிச்சு 29வயதில் ஊருக்கு போய் ஊர் நினைவில் ஊர்ச்சாப்பாட்டை தேடினேன்.
எல்லாமே தொலைந்து போயிருந்தது. தொலைந்து தொலைவாய் நானும் போயிருந்தேன்.
எங்கே தேடியும் கிடைக்காத இனி என்றும் கிடைக்கவே கிடைக்காத பொக்கிசநினைவுகள் இனிமையானவை